டெல்லி : காலனியாதிக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மும்பையில் 1942 ஆக. 8ல் செய் அல்லது செத்துமடி என்ற கோஷத்துடன் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காந்தியடிகள் துவக்கி வைத்தார். இந்த வாசகம் மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. காந்தி, நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். லட்சக்கணக்கானோர் கைதாகினர்.
இது ஆங்கிலேயரிடம் இனியும் இந்தியாவை நம் ஆள முடியாது என்ற பலத்த எச்சரிக்கையை ஏற்படுத்தியது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 79 ஆண்டுகள் இன்றோடு நிறைவடையும் இந்த நாளில், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், நாடெங்கும், ‘ஆகஸ்ட் க்ராந்தி’ கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை முன்னிட்டு சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “காலனியாதிக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது புகழஞ்சலிகள். மகாத்மா காந்தியால் உத்வேகமடைந்து, வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவெங்கும் பரவி எதிரொலித்தது; நம் நாட்டு இளைஞர்களை எழுச்சி பெறச் செய்தது” என்று கூறியுள்ளார்.