ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் ‘மிர்ச்சி மசாலா’ என்ற பெயரில் ஒட்டல் உள்ளது. இதற்கு நேற்று முன்தினம் இரவு வந்த மரு்ததுவ கல்லூரி மாணவர்கள் சிலர், டான்ஸ் பார்ட்டி நடத்த சொல்லி கட்டாயப்படுத்தினர். கொரோனா விதிமுறைகளை சுட்டிக்காட்டிய ஓட்டல் நிர்வாகிகள், அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர். இதனால், மருத்துவ மாணவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டல் ஊழியர் ஒருவரை தாக்கி விட்டு சென்றனர்.
மீண்டும் இரவு 11 மணியளவில் 150க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தடிகள், ஹாக்கி மட்டைகள், இரும்பு தடிகளுடன் ஓட்டலுக்கு நுழைந்து அடித்து நொறுக்கினர். அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி,யில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, மருத்துவ மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருத்துவ மாணவர்கள் இவ்வாறு நடந்து கொண்டது அதிர்ச்சியை அளித்துள்ளது.