சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். தாம் வகித்த பதவிகள் அனைத்துக்கும் நேர்மையாக இருந்து சிறப்பு சேர்த்தவர். பாமக கொள்கைகளை பாராட்டியவர். தனிப்பட்ட முறையில் என் மீது அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர்.
கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். சட்டமன்ற உறுப்பினராக, மேலவை உறுப்பினராக இருந்தபோது ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவர்.
ஜி.கே.வாசன் (தமாக தலைவர்): தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களோடும் பழகிய பெருமைக்குரியவர். தான் சார்ந்திருந்த பொறுப்பிலிருந்து இயக்கப் பணிக்காகவும், மக்கள் பணிக்காகவும் ஈடுபாட்டோடு செயல்பட்டவர். அவரது மறைவு தமிழக அரசியலுக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பாகும்.
டிடிவி. தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது. தேசிய சிந்தனையோடு பல்லாண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரார் திண்டிவனம் ராமமூர்த்தி.
இபிஎஸ்,ஓபிஎஸ்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில முன்னாள் தலைவருமான திண்டிவனம் ராமமூர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திண்டிவனம் ராமமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.
தமிழ்நாட்டு நலனுக்காக பாடுபட்டவர் - மு.க.ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான திண்டிவனம் ராமமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி தமிழ்நாட்டிற்கு பெரும் பெருமை சேர்த்தவர். மறைந்த பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாக பழகியவர். தமிழ்நாட்டு நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் பாடுபட்டு பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த அவர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். திண்டிவனம் ராமமூர்த்தி மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.