திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் கிறிஸ்தவ நாடார் பிரிவை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கேரள அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், கிறிஸ்தவ நாடார் பிரிவை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், ‘இதர பிற்படுத்தபட்டோர் பட்டியலை விரிவுபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. புதிய பிரிவினரை சேர்க்க ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு,’ என்றும் தெரிவித்தார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், ஓபிசி பட்டியலில் புதிய பிரிவுகளை சேர்ப்பதற்கான அதிகாரத்தை மாநிலங்களுக்கு அளிப்பதற்கான மசோதாவை ஒன்றிய அரசு தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.