×

சோழவரம் அருகே சோகம் கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாப பலி: பெற்றோர், உறவினர்கள் கதறல்

புழல்: சோழவரம் அடுத்த காரனோடை சண்முகா நகரை சேர்ந்த கன்யாலால்  மகன் அர்ஜூன் (14). அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் சத்தியநாராயணன் (15). நண்பர்களான இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர். பெரம்பூர் மதுரைசாமி மடம் கிழக்கு தெருவை சேர்ந்த சையது சனாவுல்லா மகன் சையது  ரகமதுல்லா (13), அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். இச்சிறுவன், காரனோடை சண்முகா நகரில் உள்ள பெரியம்மா கசிகோபீ வீட்டுக்கு கடந்த வாரம் வந்துள்ளான். அப்போது, அர்ஜூன்,  சத்தியநாராயணன் ஆகியோருடன் ரகமதுல்லா நண்பரானான். இவர்கள் மூவரும் ஒன்றாக விளையாடி திரிந்தனர். இந்நிலையில், நேற்று  முன்தினம் மதியம் இவர்கள் மூவரும் வீட்டுக்கு தெரியாமல், காரனோடை மாந்தோப்பு பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்றனர். அங்கு,  ஆழமான இடத்திற்கு சென்றதால், 3 பேரும் தண்ணீரில் தத்தளித்து, அலறி கூச்சலிட்டனர். ஆனால், அது ஆள்நடமாட்டம் குறைந்த பகுதி என்பதால், யாருக்கும் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் மூவரும் நீரில் மூழ்கினர்.

நேற்று முன்தினம் மாலை மேற்கண்ட கொசஸ்தலை ஆற்றங்கரைக்கு சிலர் சென்றபோது, 3 சிறுவர்களின் ஆடைகள் மட்டும் கிடந்தன. சந்தேகத்தின் பேரில் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். யாரும் அங்கு இருப்பதாக தெரியவில்லை. இதுபற்றி கிராமத்தினருக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு திரண்ட சிறுவர்களின் குடும்பத்தினர், அங்கிருந்த உடைகளை வைத்து அடையாளம் காட்டினர். உடனே, அவர்கள் இதுபற்றி சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், செங்குன்றம் தீயணைப்பு படை வீரர்களுடன் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடலுக்கு பிறகு இரவு 9.30 மணியளவில் 3 சிறுவர்களையும் சடலங்களாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Kosasthalai river ,Cholavaram , Tragedy near Cholavaram 3 boys drowned in Kosasthalai river: Parents, relatives roar
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு