சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி தமிழக- கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச்சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் நெய்தாளபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது அரிசி கடத்தல் கும்பல் சுமார் ஒரு டன் எடையுள்ள 18 மூட்டை ரேஷன் அரிசியை சாலையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம், தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.