கோவில்பட்டி: பருவக்குடி - கோவில்பட்டி - எட்டயபுரம் - வேம்பார் சாலை விரிவாக்க பணிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதில், கோவில்பட்டி நகர பகுதியில் எட்டயபுரம் சாலை, மாதாங்கோவில் தெரு, பிரதான சாலை வரை சுமார் 2 கிமீ தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் எட்டயபுரம் சாலையில் செண்பகவல்லி அம்பாள் கோயில் அருகே உள்ள ஓடை பாலம் விரிவாக்கப்பணிகள், கடந்த மாதம் தொடங்கியது. 6 மீட்டர் அகலம் உள்ள இந்த ஓடை பாலம் ரூ.35 லட்சத்தில் 15 மீட்டராக அகலப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. பாலத்துக்கு கீழ் 3 மீட்டர் உயரத்துக்கு, 6 மீட்டர் நீளத்துக்கு நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், ரூ.32.50 லட்சத்தில் பாலத்தின் கிழக்கு பகுதியில் 100 மீட்டர் தூரமும், மேற்கு பகுதியில் 80 மீட்டர் தூரமும் அணுகுசாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் மாநில நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜூ, உதவி பொறியாளர் விக்னேஷ் ஆகியோர் மேற்பார்வையில் தற்போது இரவு, பகலாக முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.