×

காரை வழிமறித்து மாஸ்க்கை கழற்றி முகத்தை காட்ட சொன்ன சம்பவம்: ஓசூர் பெண்ணிடம் செல்போனில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல்: எளிமையான முதல்-அமைச்சர் என பாராட்டு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வரின் காரை வழிமறித்து மாஸ்க்கை கழற்றி  முகத்தை காட்டுமாறு கோரிய ஓசூர் பெண்ணிடம் முதல்வர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இது, டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி எளிமையான முதல்-அமைச்சர் என்று பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் நடந்த ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் காரில் ஓசூர் சென்று கொண்டிருந்தபோது, உழவர் சந்தை அருகில் டெம்பிள் லேண்ட் அட்கோ பகுதியை சேர்ந்த ரம்யா என்பவர் முதல்வரின் கார் அருகில் சென்றார். அப்போது அவர், ‘‘முக கவசத்தை கழற்றுங்கள் சார். உங்கள் முகத்தை பார்க்க வேண்டும்’’ என்று கூறினார்.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முக கவசத்தை கழற்றி புன்சிரிப்பு சிரித்தார். அப்போது அந்த பெண் ‘‘விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி, அதற்கு பெயர் ஸ்டாலின் சார்தான்’’ என கூறினார். தொடர்ந்து அந்த பெண் ஒரு மனுவை முதல்வரிடம் கொடுத்தார். அதில், தான் கூறிய வாசகத்தையும், தனது பெயர் மற்றும் செல்போன் எண்ணையும் எழுதி இருந்தார். அதை பெற்றுக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவரது உதவியாளர்கள், அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு முதலமைச்சர் உங்களிடம் பேச உள்ளார் என கூறியுள்ளனர். இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரம்யாவிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகள் விஷ்மயா ஹரிணியிடமும் பேசினார்.

அவர்களது உரையாடல் விவரம் வருமாறு:

ரம்யா: வணக்கம் சார். நீங்கள் சாலை வசதியும், தண்ணீர் வசதியும் முழுமையாக செய்து கொடுத்தால் தமிழ்நாடு எங்கேயோ போய் விடும். நீங்கள் மக்களின் முதல்வராக இருக்கிறீர்கள். இவ்வளவு எளிமையாக உங்களிடம் பேச முடியும் என நான் நினைக்கவே இல்லை சார். ஆட்சி மிகவும் நன்றாக உள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டும். நீங்கள் நீண்ட காலம் முதலமைச்சராக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் சார். எனது தந்தையிடம் நீங்கள் பேச முடியுமா?  
மு.க.ஸ்டாலின்: உங்கள் தந்தை அருகில் இருக்கிறாரா?
ரம்யா: இல்லை சார். அவர் ஊரில் இருக்கிறார். கான்பரன்ஸ் போடலாமா.
மு.க.ஸ்டாலின்: அவர் வந்ததும் எனக்கு போன் செய்து கொடுங்கள்.
ரம்யா: இந்த நம்பருக்கே பேசலாமா. ரொம்ப நன்றி சார். வயதானாலும் நீங்கள் அழகாக, ஸ்டைலாக இருக்கிறீர்கள்.
மு.க.ஸ்டாலின்: நன்றி.
ரம்யா: எனது மகள் உங்களிடம் பேச விரும்புகிறாள் சார்.
மு.க.ஸ்டாலின்: கொடுங்கள்.
மாணவி விஷ்மயா ஹரிணி: சார் நல்லா இருக்கிறீர்களா. நான் பிளஸ்-2 படிக்கிறேன் சார். ஸ்கூல் சீக்கிரமாக ஓப்பன் செய்யுங்கள் சார்.
மு.க.ஸ்டாலின்: ஆன்லைனில் படிக்கிறீர்களா?
மாணவி: ஆமாம் சார். ஆன்லைனில்தான் படிக்கிறேன். 2 வருடமாக ஆன்லைனில்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்குள்ளேயே இருக்க முடியவில்லை. சீக்கிரமாக பள்ளியை ஓபன் செய்யுங்கள் சார்.
மு.க.ஸ்டாலின்: கொரோனா பிரச்னை குறையட்டும். அதன்பிறகு பள்ளிகளை திறக்கலாம்.  

இவ்வாறு உரையாடல் நடந்தது. முக கவசத்தை கழற்றச் சொன்ன பெண்ணிடம் தனது முக கவசத்தை ஒரு நிமிடம் கழற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த பெண் கொடுத்த சீட்டில் இருந்த அவரது செல்போனுக்கே தொடர்பு கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி எளிமையான முதல்-அமைச்சர் என்ற பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Hosur , Chief MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...