மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து நேற்று புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான (பி.ஆர்.டி.சி.) பேருந்து மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் புறப்பட்டு சென்றது. காலை 8 மணிக்கு பொறையாறு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு காரைக்கால் நோக்கி புறப்பட்டது. அதில் 25 பயணிகள் அமர்ந்திருந்தனர். ராஜீவ்புரம் என்ற இடத்தில் சென்றபோது இன்ஜின் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.
சிறிதுநேரத்தில், பஸ்சின் முன்பகுதி முழுவதும் மளமளவென எரியத் துவங்கியது. இதை பார்த்து சாதுர்த்தியமாக சாலையோரமாக பேருந்தை டிரைவர் செந்தில் நிறுத்தினார். உடனே, மின்னல் வேகத்தில் டிரைவர், கண்டக்டர் பயணிகள் அனைவரும் கீழே இறக்கினர். இதுபற்றிய தகவலின்பேரில், பொறையாறு தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.