அண்ணாநகர்: ரவுடிகள் சமீப காலமாக தங்களது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்துடன் கொண்டாடுவதுடன், பட்டாக்கத்தியால் கேக் வெட்டி அதை சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுபோன்ற நபர்களை போலீசார் கைது செய்தாலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில், கோயம்பேடு சேமாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சூர்யா (24), நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை, நள்ளிரவு 12 மணியளவில் நண்பர்களுடன் சேர்ந்து, சாலை நடுவே கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது, அவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றி அறிந்த கோயம்பேடு போலீசார், நேற்று காலை சூர்யாவை கைது செய்தனர். அவர்மீது, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கும், கோயம்பேடு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சைதப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.