×

Kitchen queens..attention please!

*  காய்கறிகள் வாடாமலிருக்க, அவற்றை எலுமிச்சைச்சாறு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் பசுமையாக இருக்கும்.
*  தோசை மாவுடன் அரை கப் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து தோசை வார்த்தால் தோசை மிகவும் மிருதுவாக இருக்கும்.
*  வெள்ளைக் கரிசலாங்கண்ணிப் பொடியை உண்டு நீர் பருகினால் முடிநரை நீங்கும். பார்வை தெளிவு பெறும்.
*  புதினா கீரையைப் பொடித்து பல் துலக்கும்போது ஈறுகளில் உள்ள நீர் வெளியேறும். அகத்திக்கீரை உண்டு வருவதால்  உடம்பிலுள்ள நச்சுக்கள் நீங்கும்.
*  பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
*  பால் பாக்கெட் வாங்கி அதை காய்ச்ச நேரம் இல்லாமல் போனால், அந்த பாக்கெட்டை தண்ணீரில் போட்டு வைத்தால் நான்கு  மணி நேரம் கெடாமல் இருக்கும்.
*  பயன்படுத்திய மாத்திரைகளின் அலுமினிய பாயிலை பாத்திரத்திலுள்ள எண்ணெய் பிசுக்கு, அழுக்குகளைத் தேய்க்கப்  பயன்படுத்தலாம். இவை கீரலை உண்டுபண்ணாது.
*  ஃபிரிட்ஜில் ஃப்ரீஸரில் வைத்திருக்கும் பொருட்கள் நன்கு உலர்ந்துவிட்டால் அவற்றை எடுப்பதற்கு கூரான ஆயுதங்களைப்  பயன்படுத்தக்கூடாது. அது அமைந்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினிய காயில் பொருத்தப்பட்டிருக்கும். கூரான பொருள் காயிலில்  பட்டு உள்ளிருக்கும் காஸ் வெளிப்பட்டு விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.
*  பருப்பு வேகும்போது அதில் சிறிது பட்டையை சேர்த்தால் குழம்பு வெகு நேரம் கெடாமல் இருக்கும்.
*  எலுமிச்சம் பழத்தின் ஒரு மூடி மீதியாகி விட்டால், அதை அலுமினிய ஃபாயில் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து  உபயோகிக்கலாம். ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
*  மண்பானையில் பாலை காய வைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.
*  இஞ்சியை மைய அரைத்து எண்ணெயில் வதக்கி கோஸை அதில் போட்டு புரட்டினால் வாசத்துடனும் சுவையுடனும் இருக்கும்  பொரியல்.
*  வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவையானபோது தோசை மாவில் 2 ஸ்பூன் கலந்து தோசை  சுட்டால் சுவையாக இருக்கும்.
*  மண்பானையில் வெண்ணெயை போட்டுக் காய்ச்சினால் சுவையான நெய் கிடைக்கும்.
*  நெய் காய்ச்சிய மண்பானையில் சிறிது நெய்யுடன் கேழ்வரகு மாவு, வெல்லம் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து சிறுசிறு  உருண்டைகள் செய்தால், குழந்தைகள் விரும்பி உண்பார்கள். சுவையுடன் சக்தியும் நிறைந்தது.
*  குளியல் அறைக் கண்ணாடியில் புகை படிந்திருந்தால் சில வெள்ளரிக்காய்த் துண்டுகளை கண்ணாடி மேல் வைத்து தேய்த்து  விட்டு நியூஸ் பேப்பரினால் துடைத்து விடவும். கண்ணாடி ‘பளபள’வென மின்னும்.
*  ரவா உப்புமாவில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் கொஞ்சம் தேங்காயும், சின்ன தக்காளியையும் வைத்து அரைத்து கொதிக்கும்  நீரில் கலந்து செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
*  பக்கோடா செய்யும்போது கறிவேப்பிலையைத் துண்டாக்கிப்போட்டு செய்தால் வாசனை அதிகமாக இருக்கும். அப்படியே  சாப்பிடலாம்.
*  பாகற்காயை உப்பு சேர்த்து, சிறிது நேரம் வேக வைத்து, தண்ணீரை வடித்துவிட்டு வதக்கினால் அதிக கசப்பு இருக்காது.
*  எந்த காய் அல்லது வற்றல் போட்டு மோர்க்குழம்பு செய்தாலும் இறக்கிய பிறகு அதில் தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம்,  வெந்தயம், பெருங்காயத்தை தாளித்துக் கொட்டுங்கள். குழம்பின் வாசனை ஊரையே தூக்கியடிக்கும்.
*  தாய்ப்பால் சரியாக சுரக்காத தாய்மார்கள் உணவில் அடிக்கடி அகத்திக்கீரையை சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
*  புதினா சட்னி செய்யும்போது ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவலும் சிறிது வேர்க்கடலையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.
*  மஞ்சள் முள்ளங்கியை சமைக்கும்போது அவற்றுடன் சிறிது சர்க்கரையைச் சேர்த்து சமைத்தால் வாசனையுடன், சுவையாக இருக்கும்.

Tags :
× RELATED முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற!