×

தமிழகத்தில் நிர்பயா நிதியின் கீழ் 111 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா வசதி: தயாநிதி மாறன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: ‘நிர்பயா நிதியின் கீழ் தமிழகத்தில் 111 ரயில் நிலையங்களில் சிசிடிவி வசதி செய்யப்பட உள்ளது,’ என்று மக்களவையில் எம்பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
அதன் விவரங்கள் வருமாறு:
1. தேசிய அளவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய துவக்கப்பட்ட நிர்பயா நிதியில் இருந்து ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒதுக்கப்பட்ட நிதிகளின் விவரங்கள் மற்றும் பயன்பாடு விவரங்கள்.
2. ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டு உள்ளதா?
3. தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு வசதிகளை செயல்படுத்துவதற்கு பரிசீலனையில் உள்ள ரயில் நிலையங்களின் விவரங்கள்.
4. நிர்பயா நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகை  மூலம் ரயில் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் திட்டத்திற்கான டெண்டர் செயல்முறையில் முறைகேடுகள் ஏதேனும் நடந்ததா? இது தொடர்பாக, சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் அல்லது வேறு எந்த அமைப்பும் விசாரணையை தொடங்கி இருக்கிறதா. அது பற்றிய விவரங்கள்.
5. நிர்பய நிதியின் கீழ் பரிசீலிக்கப்படும் புதிய திட்டங்கள், அதன் விவரங்கள் தெரியப்படுத்தவும். - ஆகிய கேள்விகளை கேட்டிருந்தார்.

இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
1 மற்றும் 2. திட்டம் ஒருங்கிணைந்த அவசர மறுமொழி மேலாண்மை 983ம்படி AI, A, B & C வகை ரயில் நிலையங்களில் நிர்பயா நிதியின் கீழ் சிசிடிவி கேமரா பொருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.295 கோடி வழங்கப்பட்டுள்ளது.  ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.95 கோடி உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி ஒப்பந்தத்தின்படி பயன்படுத்தப்படும்.
3. நிர்பயா நிதியின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 111 ரயில் நிலையங்களுக்கு சிசிடிவி கேமரா வழங்கப்பட உள்ளது. இந்த 111 ரயில் நிலையங்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 23 ரயில் நிலையங்களுக்கு சிசிடிவி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
4. மத்திய விஜிலன்ஸ் கமிஷன் அனுப்பிய புகாரின் அடிப்படையில் ரயில் டெல் விஜிலன்ஸ், ஒரு விசாரணையை தொடங்கியது. ரெயில்டெல் மூலம் வீடியோ கண்காணிப்பு அமைப்பு நவம்பர் 2016ல் தொடங்கப்பட்டது.  வீடியோ கண்காணிப்பு அமைப்புக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், 4 ரயில்டெல் அதிகாரிகளுக்கு சிறிய அபராதம் விதிக்கப்பட்டு, வழக்கமான துறை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்காக பிராந்திய வாரியாக மொத்தம் 4 டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
5. எந்த புதிய திட்டங்களும் இல்லை.

Tags : fund ,Tamil Nadu ,Union ,Dayanidhi Maran , Surveillance camera facility at 111 railway stations in Tamil Nadu under Nirbhaya Fund: Union Minister answers Dayanidhi Maran's question
× RELATED லாலு கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு 1...