விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஊரடங்கை மீறி நடந்த மீன்பிடி திருவிழாவில் திரளான பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்து அள்ளிச் சென்றனர். விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 250 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டது. இவை நன்கு வளர்ந்த நிலையில் மீன்பிடிக்க பொதுப்பணித்துறையினர் குத்தகை முறையில் ஏலம் விட்டனர். இந்த ஏலத்தை எடுத்த குத்தகைதாரர் மீன்களை பிடித்து விற்பனை செய்து வந்தார். அவரது குத்தகை காலம் முடிவடைந்தததும் பொதுமக்கள் ஏரியில் இறங்கி மீன்பிடிப்பதற்காக மீன்பிடி திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று, ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் கல்பட்டு, நத்தமேடு, ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, தெளி, சிறுவாக்கூர், அருளவாடி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏரிக்குள் இறங்கி கெண்டை, ஜிலேபி, கட்லா, ரோகு உள்ளிட்ட மீன்களை போட்டி, போட்டு பிடித்தனர். இதுகுறித்து தகவல்அறிந்ததும், காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை விரட்டியடித்தனர். இதனிடையே, ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்தியதாக, விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.