திருப்பூர்: கொரோனா 3ம் அலை வராமல் தடுக்க மாவட்டம்தோறும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் நாகை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள்:
* அத்தியாவசியம் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் காலை 6 முதல் மாலை 5 வரை மட்டுமே இயங்க அனுமதி.
*உணவகங்கள் மாலை 5 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடனும், அதன் பிறகு 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி.
* சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்கள் இயங்க தடை.
* பிரதான வணிக பகுதிகளில் அத்தியாவசியமற்ற கடைகள் சனி, ஞாயிறில் இயங்க தடை.
கொரோனா 3ம் அலை வராமல் தடுக்க நாகை மாவட்டத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள்:
* நாகை மாவட்ட கடற்கரைகளில் மக்கள் கூட ஆகஸ்ட் 31ம் தேதி வரை தடை.
* வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கு தடை.
* ஆன்லைன் தரிசனம் செய்ய அறிவுறுத்தல்.
* ஆடிப்பூரத்தை முன்னிட்டு வரும் 10, 11 ஆகிய தேதிகளில் கோயில்களில் தரிசனத்திற்கு தடை.
* வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்ல தடை நீட்டிப்பு.
* வேதாரண்யம் அருகே கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம் கள்ளிமேட்டில் பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* கள்ளிமேடு பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் மூடப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று சற்று அதிகரித்து 1,949 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் பாதிப்பு சற்று குறைந்து 189 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மாநிலத்தில் தினசரி கொரோனா உயிரிழப்பு சற்று அதிகரித்து 38 பேர் சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். இதில் இணை நோய் இல்லாத 6 பேர் அடங்குவர். ஒரேநாளில் 2,011 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருக்கிறது.