புதுடெல்லி: முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிபிஐ துணை இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் பதவியில் இருந்தபோது ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். இதில், அஸ்தனா தற்போது டெல்லி காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அலோக் வர்மா பணி ஓய்வு பெற்று விட்டார்.
இந்நிலையில், ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், ‘அலோக் வர்மா தனது பணிக்காலத்தின் போது பதவியை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். அவர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரை ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அலோக் வர்மாவின் ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தி வைக்கப்படலாம் என தெரிகிறது.