சென்னை: பாலிவுட் பாடகரும், நடிகருமான ஹனி சிங் என்ற ஹிர்தேஷ் சிங் (38), அவரது மனைவி ஷாலினி தல்வார் ஆகியோர் டெல்லியில் வசித்து வருகின்றனர். ஹனி சிங் பல இந்தி படங்களில் பாடியுள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் பாடியிருக்கிறார். இந்நிலையில், ஷாலினி தல்வார் டெல்லி குடும்ப நீதிமன்றத்தில் தனது கணவர் மீது பரபரப்பு புகாரை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது கணவர் ஹனி சிங் என்னை உடல், மனம், வார்த்தைகளால் துன்புறுத்தி வருகிறார். எங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டில் திருமணம் நடந்தது. பாடகரான அவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, என்னை அவர் மதிப்பதில்லை. மாறாக அவர் என்னை துன்புறுத்த தொடங்கினார். மதுபோதைக்கு அடிமையான அவர் என்னை பல வகையிலும் கொடுமைப்படுத்தி வருகிறார்.
பல பெண்களுடன் பாலியல் தொடர்பில் உள்ளார்’ என்று ஷாலினி தல்வார் தெரிவித்தார்.அவரது வக்கீல்கள், நீதிபதியிடம் முறையிடுகையில், ‘எதிர்மனுதாரரின் பெயரில் உள்ள சொத்துகளை தனிநபரோ, கூட்டாகவோ மூன்றாம் நபருக்கு விற்கவோ, தானம் செய்யவோ தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஹனி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும், இந்த வழக்கை ஆக. 28ம் தேதி விசாரிக்க உள்ளதாகவும் கூறினார்.