×

கட்டபஞ்சாயத்து பேசி ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் 4 குடும்பத்தை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நாகை: நாகை சாமந்தான்பேட்டையை சேர்ந்தவர் பழனி (43). இவரது மனைவி பிரபாவதி (33). பழனியின் சகோதரர் கந்தன் (40). இவரது மனைவி மகேஷ்வரி (30). அதே ஊரை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி (32). இவரது மனைவி தாமரைச்செல்வி (28). இவர்களது உறவினர் அசோக் (26). இவரது மனைவி திலகவதி (20). இந்த 4 குடும்பத்தை சேர்ந்தவர்கள், தங்களது குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 16 பேர், நாகை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த கலெக்டர் அலுவலக பணியாளர்கள் அவர்களிடம்  தீப்பெட்டிகளை பிடுங்கினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்று  பழனியிடம் விசாரணை நடத்தியபோது பழனி கூறியதாவது: எனது சகோதரர் முத்து (38). இவர் 10 ஆண்டுகளுக்கு முன் பிரியா(30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். கேரளாவில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருவதால் விடுமுறை காலங்களில் மட்டும் சாமந்தான்பேட்டைக்கு முத்து வந்து செல்வார்.  

கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரியாவை விட்டு முத்து பிரிந்து வாழ்ந்தார். இந்நிலையில் இருதரப்பினரையும் நேரில் அழைத்து சாமந்தான்பேட்டை பஞ்சாயத்தார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பிரியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரூ.16 லட்சம் அபராதத் தொகையை முத்து செலுத்த வேண்டுமென பஞ்சாயத்தார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முத்து திடீரென தலைமறைவானார். கடந்த 2 மாதமாக பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் பஞ்சாயத்தார் எனது குடும்பம், எனது சகோதரர்கள் குடும்பம், உறவினர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். ஊரை விட்டு ஒதுக்கி வைத்து 16 நாட்களான நிலையில், எங்கும் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் எங்களது குழந்தைகள் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனர். எங்களை ஊரைவிட்டு ஒதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags : Kattapanchayam ,Naga Collector , Kattapanchayat,, Fire, Naga Collector, Office
× RELATED கொரோனா பரவலை கட்டுப்படுத்த...