×

கொரோனா பேரிடர் நேரத்தில் திருவாரூர் - காரைக்குடி இடையே நிறுத்தப்பட்ட விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!!

திருவாரூர்: கொரோனா பேரிடர் நேரத்தில் திருவாரூர் - காரைக்குடி இடையே நிறுத்தப்பட்ட விரைவு ரயில் சேவை ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். திருவாரூர் - காரைக்குடி இடையே அகல ரயில் பாதை நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்காலிகமாக சோதனை ஓட்டம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவியதால் இந்த பாதையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை அடுத்து இன்று முதல் திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் சிறப்பு விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் சென்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ராமேஸ்வரம் - சென்னை, காரைக்குடி - சென்னை உள்ளிட்ட அனைத்து விதமான ரயில் சேவைகளையும் உடனடியாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இருப்பு பாதையில் பணியாற்றிய கேட் கீப்பர்கள் அனைவரும் வேறு பணியிடங்களுக்கு மாற்றப்பட்டதால் காலியாக உள்ள அந்த பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Corona disaster ,Tiruarur - Karaku , Corona, Thiruvarur - Karaikudi, express train
× RELATED மீண்டும் பணி வழங்க செவிலியர்கள் கோரிக்கை