சென்னை: கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழகத்தில் மிக விரைவில் நிறைய கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். கோயில் சிலைகளை கடத்தும் நபர்களை கைது செய்து வருகிறோம் எனவும், திருடுப்போன சிலைகளை மீட்கும் பணியில் அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயில் நிலங்களில் எளிய மக்களின் வீடுகள் இருக்கும்பட்சத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டால் அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கவோ அல்லது கோவில் இடங்களிலே புதிய குத்தகை முறையில் இடம் வழங்கவும் தயாராக உள்ளோம் என 2 நாட்களுக்கு முன் அமைச்சர் பேட்யளித்திருந்தார்.
தமிழகத்தில் உள்ள களவு போன கோயில் சிலைகளை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கோயில் சிலைகளை கடத்தி சென்றவர்கள் குறித்த தகவல்களையும் சிலைகள் எங்குக் கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்த தகவல்களையும் சேகரித்து வருகிறோம். இதில் தொடர்புடைய அனைவரது மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள, தமிழகத்தின் பாரம்பரிய சிலைகளை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை, அறநிலையத் துறை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு அளித்து, அதில் வரும் வருமானம் கோயில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.