அபுதாபி: இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியவுடன் இந்தியாவில் இருந்து செல்லும் விமானங்களுக்கு ஒரு சில நாடுகளில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானங்களுக்கு தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான போக்குவரத்திற்கான தடையை நாளை முதல் நீக்க முடிவு செய்துள்ளதாக நாட்டின் தேசிய அவசரம் மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள், வசிப்பவர்கள் இந்த நாடுகளில் இருந்து வந்தால், அதற்குரிய ஆவணங்கள் இருந்தால் அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று அல்லது பயணம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், மருத்துவம், கல்வி, மற்றும் அரசுத்துறை, மருத்துவச் சிகிச்சையை நிறைவு செய்யவருவோர், படிப்பை நிறைவு செய்யவருவோருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதிலிருந்து மனிதநேய அடிப்படையில் விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.