×

தலைநகர் டெல்லியில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்; ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ‘மசாஜ்’ செய்ய தடை: மகளிர் ஆணையத்தின் கெடுபிடியால் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: மகளிர் ஆணையத்தின் அறிவுறுத்தலால், டெல்லியில் உள்ள ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதை தடுக்க ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பல்வேறு நாடு, மாநிலங்களை சேர்ந்த பிரமுகர்கள் ஆயிரக்கணக்கில் தினமும் வந்து செல்வதால், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களின் தொழில் பிரதானமாக உள்ளது. அதில், குறிப்பிட்ட சில ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்கள் அமோகமாக நடக்கிறது. இந்த சென்டர்களில் பெண்களை பணிக்கு அமர்த்தியும், பெண்களை ஏற்பாடு செய்யும் புரோக்கர்களையும் கொண்டும், பாலியல் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா துறையில் வாய்ப்பு பறிபோன துணை நடிகைகள் உட்பட பல பெண்கள் இந்த தொழிலுக்கு வருகின்றனர். இதனால், மசாஜ் சென்டர் பாலியல் தொழில் அமோகமாக நடக்கிறது. அதேநேரம் பாலியல் குற்றங்களும் அதிகம் நடக்கின்றன. சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், போதை பொருட்களை பயன்படுத்துதல், ஆள் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்கும் மசாஜ் சென்டர்கள் ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றன. இதுதொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கு, டெல்லி மகளிர் ஆணையம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக டெல்லி அரசு புதிய அரசாணையை வெளியிட்டு, சில வழிகாட்டல் நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன்படி, மசாஜ் சென்டர்களில் குறைந்து 10 பேர் பணிபுரியும் வகையில் வசதிகள் இருக்க வேண்டும். மசாஜ் சென்டர் தொடர்பான விவகாரங்களை விசாரிக்கவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் தனியாக பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பா, மசாஜ் சென்டர்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட வேண்டும். வேலை நேரத்தில் வெளிப்புறக் கதவுகள் திறந்து வைத்திருக்க வேண்டும். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை நேரமாக இருக்க வேண்டும்.

இந்த மையங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி குளியலறைகள் மற்றும் உடை மாற்று அறைகள் இருக்க வேண்டும். பிசியோதெரபி, அக்குபிரஷர் அல்லது தொழில்முறை சிகிச்சையில் பட்டம், டிப்ளமோ அல்லது முறையான சான்றிதழ் பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் காவல் துறையின் அனுமதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி மசாஜ் பிரிவுகள் இருக்க வேண்டும். ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்ய கூடாது.
வாடிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

அவர்களின் தொலைபேசி எண்கள் உட்பட விபரங்கள் அதில் பதிவிட்டு இருக்க வேண்டும். சிசிடிவி கேமராக்களை மையத்தின் நுழைவாயில், வரவேற்பு அறை மற்றும் பொதுவான பகுதிகளில் பொருத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் வந்து சென்ற விபரங்கள் தொடர்பான பதிவேட்டை குறைந்தது மூன்று மாதங்களுக்கு வைத்திருக்க வேண்டும். 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் மையங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு புகார் குழு அமைக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,Kejriwal , The flagship sex industry in the capital Delhi; Kejriwal bans ban on 'massage' for men and women: Kejriwal
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...