×

எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த உத்தரவு

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது தமிழகத்தின் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் உளுந்தூர்பேட்டை அருகே பாதுகாப்பு பணிக்கு வந்த பெரம்பலூர் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நீதிமன்றம் தானாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட அப்போதையை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் ராஜேஷ் தாஸூக்கு உதவியாக பெண் எஸ்.பியை மிரட்டிய புகாரில் அப்போதைய செங்கல்பட்டின் எஸ்.பியாக இருந்த கண்ணன் ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை கடந்த 29ஆம் தேதி விழுப்புரம் சிபிசிஐடியின் கூடுதல் எஸ்.பி கோமதி தலைமையிலான போலீசார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிபதி கோபிநாத் முன்னிலையில் தாக்கல் செய்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை டிசம்பர் 20க்குள் முடிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்.பி கண்ணன் ஆகிய இருவரையும் வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : SP ,Rajesh Das , Rajesh Das, DGP
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...