×

பதின் பருவக் குழந்தைகளின் அம்மாவா நீங்கள்?!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய வளர் இளம் பருவத்தினரைப் பார்க்கும் போது மனதில் தானாக அச்சம் உருவாகிறது. ஆண், பெண் குழந்தைகள் பருவ வயதில் இருக்க வேண்டிய விழிப்புணர்வு, அத்தியாவசிய உணவு, பகிர்ந்தளிக்க வேண்டிய உணர்வு மற்றும் செய்ய வேண்டிய உடற்பயிற்சி எல்லாம் மிஸ்ஸிங். குழந்தைகளை கவனிக்க, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள நேரம் இன்றி பெற்றோர் ஓடுகின்றனர். பள்ளிகள் குழந்தைகளை மார்க் வாங்க வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. பள்ளியில் விளையாட்டு மிஸ்ஸிங்.

தன் எதிர்ப்பாலினத்தவரை எவ்விதம் அணுக வேண்டும் என்பதையும் சென்சார் இல்லாத காட்சி ஊடகங்களின் வழியாகவே கற்கின்றனர். இந்த மிஸ்மேட்ச் விஷயங்கள் அவர்களது குடும்ப வாழ்க்கைச் சக்கரத்தைத் தடம் புரள வைக்கின்றன.உடல் நலம், மன நலம் இரண்டிலுமே சின்ன மாற்றங்களைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர், காதல், திருமணம் என தனக்கான தனி வாழ்வில் நுழையும் உறவினைப் புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்து வாழ்வதும் இங்கு பெரும் பிரச்னையாக மாறி உள்ளது.

திருமணமாகிச் சில மாதங்களில் பிரிந்து விடுவதெல்லாம் இன்று சாதாரணம். ஒற்றைக் குழந்தைகளாக வளரும் இவர்களுக்குள் “ஈகோ” மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒத்துப் போதல், ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய பழக்கம் இல்லாத காரணத்தால் படித்து விட்டு வேலையற்றவர்களாக  உள்ளனர். கிடைக்கும் வேலைக்குள் தங்களைப் பொறுத்திக் கொண்டு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும் இவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. இவற்றைக் கண்டு கொள்ளாமல் விடும் பொழுது இவர்களே சமூகப் பிரச்னைகளாக மாறி வருகின்றனர்.

திருமணத்துக்குப் பின்னர் குழந்தையின்மையும், புரிதலின்மையும் இவர்களின் மாபெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இவற்றைத் தவிர்க்க வளர் இளம் பருவத்தில் அவர்களை சரி செய்ய வேண்டியுள்ளது. இன்றைய  வளர் இளம் பருவக் குழந்தைகளின் அம்மாக்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் டாக்டர் அகிலாம்பாள். “முன்பெல்லாம் நமது தாத்தா-பாட்டி  உடன் பிறந்தவர்கள் 5 அல்லது 6 நபர்கள் இருந்ததை நாம் பார்த்துள்ளோம்.

1990-களில் மத்திய அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி  அதிகப்படியான நிகழ்ச்சிகள் செய்து “நாம் இருவர் நமக்கு இருவர்”,  “ஆசைக்கு ஒன்னு, ஆஸ்திக்கு ஒன்னு” என்று குடும்ப கட்டுப்பாட்டிற்கு பிரச்சாரம் செய்தனர். தற்போது 20 வருடங்களில் எங்கு பார்த்தாலும் கருத்தரிப்பு மையங்கள் மற்றும் அதற்கான விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கான முக்கிய காரணம் என்ன என்று ஆராய்ந்தால் Life Style Modification தான் இந்த குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

அன்றாட வாழ்வின் மாற்றங்கள்

உடல் செயல்பாடு(Physical Activity)

நமது உடலின் செயல்பாடு குறைந்துவிட்டன. நாம் அருகில் உள்ள கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட மோட்டார் வாகனம் பயன்படுத்திதான் செல்கிறோம். இது நமது உடலின் செயல்பாட்டை குறைக்கிறது. குழந்தைகள் 9-வது வகுப்பு வந்தவுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார்கள். மாணவர்கள் வெறும் மதிப்பெண் பெரும் எந்திரமாக மாற்றப்பட்டு உள்ளனர். வாரத்தில் குறைந்தது 15 நிமிட உடற்பயிற்சி மிகவும் அவசியமானது.

உணவு முறைகள் (Food Habits)

செயற்கை நிறமூட்டி பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், குளிரூட்டப்பட்ட பானங்கள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வதால் நமது உடலில் சர்க்கரையின்  அளவு அதிகரித்து உடல் பருமனும் அதிகமாகிறது. இது குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது. முக்கியமாக Abdominal Feel அதிகமாகும் பொழுது குழந்தை உண்டாகுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. மாதவிடாய் தள்ளிப்போகுதல், கருமுட்டை வளர்ச்சியில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்களுக்கு Testosterone ஹார்மோன் அளவு குறைகிறது. தாம்பத்திய குறைபாடுகள் ஏற்படுகிறது.

மன  அழுத்தம்(Stress)

தற்போதைய காலகட்டத்தில் மனஅழுத்தம் அதிகமாகிவிட்டது. நமது அன்றாட வாழ்வில் காலையில் அலுவலகம் செல்லும் போது ஏற்படும் காலதாமதத்தில் ஆரம்பித்து மாலையில் வீடு திரும்பும் வரை பல மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். இதனாலும் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. மன அழுத்தம் குறைக்க மற்றும் Physical Activity அதிகரிக்க பள்ளியிலேயே Yoga கற்றுத் தரவேண்டும்.

உடைகள்(Dressing)

டைட் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் உயிர் அணு உற்பத்தியை குறைத்து விடுகிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு காலத்தில் ஆண்கள் அணிந்த கோவணம் கிண்டலாகப் பார்க்கப்பட்டது. இப்போது ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிப்பதால் அமேசான் மற்றும் பிலிப்கார்ட்டில் இந்த உடையை விற்பனை செய்கின்றனர். பருத்தித் துணியிலான உடைகளை அணியப் பழக்கப்படுத்தலாம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம்

* அதிக விளைச்சல் குறைந்த காலத்தில் கிடைப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மேலும் பழங்கள், காய்கறிகள் எப்போதுமே புதிதாக இருக்க உபயோகிக்கப்படும் மருந்துகள் கருமுட்டை மற்றும் உயிரணுக்களை பாதிக்கிறது.

* Social Status ஆக கருதும் மது அருந்துதல் மற்றும் புகைப் பழக்கம். இதுவும் உயிரணுக்கள் மற்றும் கருமுட்டை உண்டாவதை பாதிக்கிறது. நமது கலாச்சார மாற்றங்களே குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே இந்த  கலாச்சார மாற்றத்தை சரி செய்வதன் மூலம் கவலை இல்லாமல் இருக்கலாம். வளர் இளம் பருவக் குழந்தைகளின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் லைஃப் ஸ்டைலை ஆரோக்கியமானதாக வடிவமைக்க வேண்டும். அந்த நடைமுறைகளை வழக்கமாகவும், வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.

துரித உணவுகள் தவிர்த்து நஞ்சில்லா உணவுகளைக் கொடுப்பது அவசியம். உறவுகளைக் கையாளுதல். சூழலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும்படியாக மன நிலையுடன் அவர்களை வளர்ப்பதும் அவசியம். இது போன்ற கவனிப்புகள் அவர்கள் மூலம் ஆரோக்கியமான அடுத்த
தலைமுறையை உருவாக்க உதவும்.

தொகுப்பு: யாழ் ஸ்ரீதேவி

Tags : teenagers ,
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு