×

மாவட்டம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

ஈரோடு:  ஈரோட்டில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நேற்று கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி, கூரபாளையம், பிச்சாண்டம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மேட்டுக்கடை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனப்பிரியா, கூரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி, கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, சவுந்திரவள்ளி வேலுச்சாமி, ஊராட்சி செயலாளர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வட்டார வளர்ச்சி துறை மற்றும் கிராம ஊராட்சி சார்பில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அண்ணா மடுவில் துவங்கிய கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தில் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாதை களை ஏந்தி கோஷமிட்டவாறு நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ்,அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலரும் ஊர்வலத்தில் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

சந்தையில்  விழிப்புணர்வு: அந்தியூரில் திங்கள்கிழமை தோறும் வார சந்தையானதுகூடுவது வழக்கம். அதன்படி நேற்று வாரச்சந்தை நடைபெற்று வந்தது.அந்தியூர் வட்டாச்சியர் விஜயகுமார் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகளும், செயல்அலுவலர் ஹரிராமமூர்த்தி தலைமையில் பேரூராட்சி பணியாளர்களும்  வாரச் சந்தைக்குள் கொரோனோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மேலும் கொரோனா பரிசோதனை செய்த கொள்ள முன்வந்தவர்களுக்கும் சந்தையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி பர்கூர் மலைப் பகுதிகளிலுள்ள 32க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் வந்து செல்லும் சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது, போதிய கொரோனா நோய்தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சரக்கு வாகனம் அலங்கரிக்கப்பட்டு வாகனத்தின் முன்புறம் கொரோனா வைரஸ் தோற்றமுடைய பொம்மை உருவம் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் தூய்மைப் பணியாளர்கள் புஞ்சைபுளியம்பட்டி நகர் முழுவதும் சென்று மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முறையாக சோப்பு போட்டு கை கழுவுதல், மற்றும் முக கவசம் அணிதல் குறித்து கும்மியடித்து நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  பவானி: அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, சக்திவேல்ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்துகொண்டு கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். துணை வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் ஷர்மிளா, சண்முகப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Corona , Across the district Corona Awareness March
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...