×

வனத்துறையினர் விசாரணை தொடக்கம் களக்காடு வனப்பகுதியில் தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: புலிகள் காப்பக துணை இயக்குனர் தகவல்

களக்காடு:  களக்காடு வனப்பகுதியில் தீ வைத்தவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு தெரிவித்தார்.  நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு சிறுத்தை, புலி, கரடி, யானை, செந்நாய், கடமான், சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த 30ம் தேதி களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி வனச்சரகம் ஆனைகல் விளை வனப்பகுதியில் திடீர் என காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது.தகவல் அறிந்ததும், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு தலைமையில், களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனச் சரகங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட வனத்துறை ஊழியர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள், மற்றும் கிராம மக்கள் உள்பட 180 பேர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தீ பற்றிய பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு தண்ணீர் வசதி இல்லை. இதனால் தீயணைப்பு குழுவினர் மரக்கொப்புகளை வைத்து அடித்தும், கற்கள், மண்ணை அள்ளி போட்டும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கட்டுக்குள் வராமல் பரவிய வண்ணம் இருந்தது. ஆனைகல் விளை பகுதியில் பற்றிய தீயானது, மாவடி பொத்தை, கொசவத்தி வலை வழியாக சக்கதேவி பொடவு வரை பரவி 3 நாட்களாக கொளுந்து விட்டு எரிந்தது.

தீ பற்றிய பகுதிக்கு நடந்து மட்டுமே செல்ல முடியும். தீயை அணைக்க நவீன கருவிகளும் இல்லை என்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. எனினும் தீயணைப்பு குழுவினரின் தீவிர முயற்சியின் காரணமாக இந்த காட்டுத்தீ நேற்று முன்தினம் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அணைக்கப்பட்டுள்ளது. தீயினால் 6 ஏக்கர் பரப்பளவில் சுக்குநாறி புற்கள் கருகின.இதுபற்றி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு கூறுகையில், ‘காட்டு தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் வனவிலங்குகளுக்கும், மரங்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. சுக்குநாறி புற்கள் மட்டுமே கருகியுள்ளன. வனக்குற்றங்களில் ஈடுபட்டு, வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் யாரேனும் வனப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேககம் எழுந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வனப்பகுதிக்கு தீ வைத்தவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். தீ வைத்தவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10ஆயிரம் சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் பெயர், ஊர் போன்ற விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் இனிவருங்காலங்களில் தீ விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக மலையடிவாரத்தில் விவசாய தோட்டங்கள் வைத்திருக்கும் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.


Tags : Forest Department ,Kalakadu forest , Foresters start investigation Action under the Thugs Act against those who set fire to the Kalakadu forest: Information from the LTTE Deputy Director of Archives
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...