×

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஐக்கு வழங்க தயார்: ஐகோர்ட்டில் தமிழக காவல்துறை தகவல்..!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஐக்கு வழங்க தயாராக இருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் கடந்த ஆண்டு, மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதில் தொடர்புடைய திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் இருக்கின்றனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ விசாரித்துவருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால், வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம் ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறையில் இருக்கும் அருளானந்தம், பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்துவந்தவர். இந்த நிலையில் அருளானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது .

அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை கீழ்நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார். அப்போது ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொள்ளாச்சி பாலியல் வழக்கு விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி தமிழக காவல்துறையை தயாராக இருப்பதாகவும் குறிப்பாக எஸ்பி அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயார் என்றும் உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

Tags : Pollachi ,CBI ,Tamil Nadu Police , Pollachi is ready to provide all cooperation to the CBI to complete the sex case quickly: Tamil Nadu Police information in the court ..!
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!