×

கணவர் ராஜ் குந்த்ரா மீதான ஆபாச பட தயாரிப்பு வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்!: நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்..!!

மும்பை: கணவர் ராஜ் குந்த்ரா மீதான ஆபாச பட தயாரிப்பு வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாக நடிகை ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார். ஆபாச படங்களை தயாரித்து அவற்றை இணையத்தில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்டார். ஷில்பா ஷெட்டிக்கும் இதில் தொடர்பு உள்ளதா என மும்பை போலீசார் விசாரித்து வரும் நிலையில் இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஷில்பா ஷெட்டி, கடந்த சில நாட்கள் தனக்கு சவாலானதாக அமைந்துள்ளதாகவும், பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள், குற்றச்சாட்டுகள், வதந்திகள் தன்னை நோக்கி பாய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தாம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில் இனியும் அவ்வாறே இருக்க போவதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தன் மீது சுமத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதித்துறை மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ள ஷில்பா ஷெட்டி, தங்கள் குடும்பத்தின் சார்பாக கணவர் ராஜ் குந்த்ரா மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது எனவும் நடிகை ஷில்பா ஷெட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Raj Kundra ,Shilpa Shetty , Raj Kundra, Porn Production, Actress Shilpa Shetty
× RELATED பாடகருடன் மிருணாள் டேட்டிங்: ஷில்பா ஷெட்டி பார்ட்டியில் அம்பலம்