சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஆக.4 முதல் 6 வரை நீலகிரி, கோவை மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அரபிக் கடலில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.