கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த நாகலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன்பிடிக்க ஒன்று திரண்டனர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மற்றும் வரஞ்சரம் போலீசார் சென்று கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதாக எச்சரித்து திருப்பி அனுப்பினர். இந்நிலையில் நேற்று வேளாக்குறிச்சி, கண்டாச்சிமங்கலம், நாகலூர், வரஞ்சரம், பொரசக்குறிச்சி உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாகலூர் கிராம பெரிய ஏரியில் மீன்பிடிக்க திரண்டனர். தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி, வரஞ்சரம் போலீசார் அங்கு வந்தனர். அப்போது பொதுமக்கள் திடீரென ஏரியில் இறங்கி மீன்பிடிக்க தொடங்கினர். போலீசார் எச்சரித்தும் ஏற்க மறுத்து ஆர்வமாக மீன்பிடித்தனர். ஏரியில் நீர் குறைந்து வருவதால் கெண்டை, கொறவை, வெரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பிடிக்கப்பட்டது. கெண்டை மீன் ஒரு கிலோ முதல் 4 கிலோ வரை இருந்தன. நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 2 ஆயிரம் கிலோ எடைகொண்ட மீன்கள் பிடிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இவ்விழாவால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.