நாகை: நாகையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு நாகை 2வது கடற்கரை சாலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற சொகுசு காரை சோதனை செய்த போது ஏராளமான சாமி படங்கள் இருந்தன. ஒவ்வொன்றாக எடுத்து பின்னால் இருந்த பிரேம் அட்டையை பிரித்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதையடுத்து காரில் இருந்த 8 பேர், மற்றும் கஞ்சா பொட்டலங்களுடன் நாகை டவுன் போலீசில் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி அதை சிறிய பொட்டலமாக போட்டு சாமி படங்களுக்குள்ளே வைத்து பிரேம் அட்ைடயால் மூடி விடுகின்றனர். பின்னர் காரில் நாகை கொண்டு வந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்துவது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.60லட்சம் மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பொட்டலங்கள், சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 8பேரை கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.