×

ரயில்வே ஒப்பந்த ஊழியர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ரவுடி சரமாரி வெட்டிக்கொலை

* சடலத்தை பைக்கில் கட்டி இழுத்து சென்றனர்
* ஓராண்டாக காத்திருந்து பழிக்குப்பழி
* கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ரயில்வே ஒப்பந்த ஊழியர் கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வில்லிவாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வில்லிவாக்கம், பாரதி நகர், 1வது தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் (28). பிரபல ரவுடியான இவர், கடந்த ஆண்டு ஐசிஎப் ரயில்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர் கருணாகரனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை பழிக்குப்பழி வாங்குவதற்கு கருணாகரனின் கூட்டாளிகள் காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமீனில் வெளிவந்த அலெக்‌ஸ், பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார்.

கடந்த 30ம் தேதி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை வந்திருந்தார். அதன்பிறகு வில்லிவாக்கம் வீட்டில் தங்கினார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இவர் வீட்டின் வெளியே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர், அலெக்ஸை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர், அருகிலிருந்த அம்மிக்கல்லை தூக்கி, அவரது தலையில் போட்டனர்.  அதன்பிறகும் ஆத்திரம் தீராத அவர்கள், அலெக்ஸின் சடலத்தை பைக்கில் கட்டி, தரதரவென  இழுத்து சென்று நியூ ஆவடி ரோடு ஆடுதொட்டி அருகே வீசிவிட்டு சென்றனர்.  இதை பார்த்து அப்பகுதி மக்கள் தலைதெறிக்க ஓடினர். தகவலறிந்து வந்த வில்லிவாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலம் கிடந்த பகுதி ஐசிஎப் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால், ஐசிஎப் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த நவீன், ரஞ்சித், சூர்யா ஆகிய 3 பேர் நேற்று மதியம் ஐசிஎப் போலீசில் சரணடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கருணாகரன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் அலெக்ஸை கொலை செய்ததாக தெரிவித்தனர். அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சரவணன் (28), சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

வாக்கிங் சென்றவர் கொலை
புதுவண்ணாரப்பேட்டை டி.எச்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பீட்டர் (54), கூலி தொழிலாளி. திருமணமாகாத இவர், தனது தம்பி குடும்பத்துடன் வசித்து  வந்தார். நேற்று முன்தினம் இரவு  புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் சாலை தந்தை பெரியார் பூங்கா அருகே இவர், வாக்கிங் சென்றபோது,  அங்கு வந்த மர்ம நபர், திடீரென இவரை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், பீட்டர் உடலை  மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, பீட்டரை குத்தியது  மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது தெரியவந்தது. அந்த நபர், சாலையில் நடந்து செல்வோரிடம் பணம் கேட்பார் என்று கூறப்படுகிறது. அப்படி,  கொடுக்கவில்லை என்றால் கத்தியால் குத்திவிடுவேன் என மிரட்டுவாராம்.  அதேப்போல், சம்பவத்தன்று,  பீட்டரிடமும் பணம் கேட்டுள்ளார். அவர் பணம்  கொடுக்காததால் குத்தி கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய  வந்துள்ளது. அவரை பிடித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Rowdy , Railway contract employee, murder, bail, Rowdy, murder
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...