கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த சூரப்பட்டு கிராமத்தில் 40 வருடத்துக்கும் மேலாக பழமைவாய்ந்த வாராந்திர சந்தை செயல்பட்டு வந்தது. இந்த வாராந்திர சந்தையில் காய்கறி, கைவினை பொருட்கள் மற்றும் கால்நடை உயிரினங்கள் போன்ற அனைத்து விதமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இங்கு வாரந்தோறும் புதன் கிழமைகளில் நடைபெறும் சந்தைக்கு கெடார், சூரப்பட்டு, வெங்கந்தூர், சிறுவாலை, அன்னியூர், கக்கனூர் போன்ற சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சந்தை பராமரிப்புக்காக இங்கு சந்தை போடுவது தடை செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு இதுவரையில் இந்த சந்தை பராமரிப்பின்றி புதரடைந்து 5 வருடத்துக்கும் மேலாக பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாராந்திர சந்தைக்கு அனந்தபுரம், கண்டாச்சிபுரம், காணை உள்ளிட்ட கிராமங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பழமையான வாராந்திர சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.