ஆம்பூர்: ஆம்பூர் அருகே பாலாற்றில் புதைக்கப்பட்டுள்ள ஓகேனக்கல் குடிநீர் பைப் லைன் தொடர் மணல் கடத்தலால் சேதமடைவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாரியத்தின் மூலம் பாலாற்றில் ஆம்பூரில் ஆத்தங்கரை, காங்கர் தங்கியா, சோமலாபுரம், பச்சகுப்பம் ஆகிய பகுதிகளில் ராட்சத பைப்லைன் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் திட்டத்தின் வாயிலாக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சி, ஊராட்சிகள் ஆகியவை குடிநீர் வினியோகத்தால் பயனடைந்து வருகின்றன.
இந்த பகுதிகளில் பாலாற்றில் மணல் அள்ளப்பட்டால் பைப் லைன் சேதமடையும் நிலை உள்ளதால் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கை பெயரளவில் உள்ளதாகவும், தொடர்ந்து இப்பகுதிகளில் மணல் அள்ளி கடத்தப்படுவதால் பைப்லைன் வெளியே தெரிவதாகவும், ஜேசிபி ஆகியவற்றை பயன்படுத்தி மணல் அள்ளப்படுவதால் பைப் லைன் சேதமடைந்து வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.