மும்பை: சிறையில் உள்ள ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா, இரண்டு ஆப்ஸ் மூலம் 51 ஆபாச படங்களை பதிவேற்றியும் வெளியிட்டும் உள்ளதாக மும்பை போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலபதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாச படம் தயாரித்து வெளியிட்ட விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஜாமின் பெறுவதற்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாளை (ஆக. 2) அவரது இடைக்கால ஜாமின் மனு மீதான விசாரணை மும்பையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ராஜ் குந்த்ரா கைது விவகாரத்தின் பின்னணியில் நடிகைகள் ஷெர்லின் சோப்ரா மற்றும் பூனம் பாண்டே ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஆபாச பட தயாரிப்பு விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து அவரிடம் போலீஸ் குழு விசாரணை நடத்தி உள்ளது. இருந்தும், ஷில்பா மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லை என்பதை காவல்துறை இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையே, ராஜ்குந்த்ராவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் இரண்டு ‘ஹாட்ஷாட்’ செயலியில் (ஆப்ஸ்) இருந்து 51 ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆபாசமான படங்கள் பதிவேற்றியும், வெளியிட்டும் உள்ளன. அவை, தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கண்ட விபரங்களை, ராஜ்குந்த்ராவுக்கு எதிராக பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். இந்த படங்கள் தயாரித்ததில் ராஜ் குந்த்ராவுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ராஜ் குந்த்ராவுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா? என்பது பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.