×

குமரி மேற்கு கடற்கரையில் தடைகாலம் நிறைவு; குளச்சல் விசைப்படகுகள் மீன்பிடிக்க புறப்பட்டன: மீனவர்கள், மீன் சார்ந்த தொழிலாளர்கள் உற்சாகம்

குளச்சல்: மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு  60 நாட்கள்  தடை விதித்துள்ளது. நாட்டில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் இருவேறு பருவ காலங்களில் இந்த தடை அமல்படுத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் ஆண்டுதோறும்  ஏப்ரல் 15 முதல் ஜூன் 15ம் தேதிவரை தடை விதிக்கப்படுகிறது. அதேபோல்  மேற்கு கடற்கரையான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல்,  தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை  பகுதிகளில் மே 31 நள்ளிரவு முதல் ஜூலை 31ம் தேதி வரை விசைப்படகுகளுக்கு தடை  விதிக்கப்படுகிறது.

இதன்படி குமரி மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த மே 31ம் தேதி  நள்ளிரவு முதல்  விசைப்படகுகள் மீன்பிடி தடை அமலுக்கு வந்தது. இந்த தடை நேற்று ஜூலை  31ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதனால் இன்று முதல் விசைப்படகுகள்  மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றன. இதனை முன்னிட்டு குளச்சல் காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்குதந்தை மரிய செல்வன் சிறப்பு திருப்பலி நடத்தினார். தொடர்ந்து திரு எண்ணெய் மந்திரிக்கப்பட்டு விசைபடகில் தொழிலாளர் நெற்றியில் முத்திரை பதித்து ஜெபம் செய்தார். குளச்சல் பகுதியில் சுமார் 300  விசைப்படகுகள் உள்ளன.

இந்த தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளில் இன்ஜின்களை பொருத்துவது, பெயிண்ட் அடிப்பது, பேட்டரி மற்றும் ஒயரிங்,  வலைகளை சீரமைக்கும் பணியில்  ஈடுபட்டு  வந்தனர். ஒரு விசைப்படகு  ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன்பிடித்துவிட்டு கரை  திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால்,  புல்லன், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு  தேவையான உணவு, குடிநீர் மற்றும் ஐஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை  விசைப்படகில் கொண்டு செல்வர்.

நேற்று நள்ளிரவு முதல் குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் விசைப்படகுகளுக்கு மீன்பிடித்தடை நிறைவடைந்ததால் விசைப்படகுகள் மீன்பிடிக்கச்செல்ல தயாராகின. விசைப்படகுகளில் ஐஸ்  ஏற்றும் பணி நடந்தது. அதிகாலை முதல் விசைப்படகுகள் மீன்பிடிக்க புறப்பட்டன.  இதனால் மீன்பிடி சார்ந்த  தொழிலாளர்களும் உற்சாகமடைந்து உள்ளனர்.

Tags : Kumari West Coast , The ban on Kumari West Coast is over; Pond boats set out to fish: fishermen, fish workers excited
× RELATED பங்குனி திருவிழாவை முன்னிட்டு...