தானே: பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் அகில இந்திய நியாய விலைக் கடை விநியோகிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் பிரகலாத் மோடி தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ்நகர், அம்பர்நாத் உள்ளிட்ட பகுதி நியாய விலை கடைகள் விநியோகிப்பாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார். பின்னர், அவர்களிடையே பேசிய பிரகலாத், ‘‘உங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துங்கள். உங்கள் கோரிக்கைகள் ஒன்றிய, மாநில அரசின் காதுக்கு எட்டும் வரை போராட வேண்டும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை யாரும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டாம். உங்கள் போராட்டத்தை பார்த்து முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரேயும் பிரதமர் நரேந்திர மோடியும் உங்கள் வீட்டு வாசலுக்கே வரவேண்டும். அந்த அளவுக்கு போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும். நான் நாடு முழுவதிலும் உள்ள 6.5 லட்சம் நியாய விலை கடை விநியோகிப்பாளர்களின் பிரதிநிதி. இங்கே அடக்குமுறை செல்லாது,’’ என்றார்.