கவுகாத்தி: அசாம், மிசோரம் இடையே ஏற்பட்ட எல்லை பிரச்னையால் கடந்த 26ம் தேதி எல்லையில் இரு மாநில போலீசாருக்கு இடையே நடந்த மோதலில் அசாம் போலீசார் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மோதல் நடந்த கோலாசிப் மாவட்ட வைரங்க்டே காவல் நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, அம்மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் 4 பேர் உட்பட சுமார் 200 பேர் மீது மிசோரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எப்ஐஆரில்பெயர் இடம் பெற்ற அனைவரும் இன்றைக்குள் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்தா, ‘‘எந்த விசாரணையிலும் மகிழ்ச்சியுடன் பங்கேற்க தயாராக இருக்கிறேன். ஆனால், ஒரு நடுநிலையான அமைப்பு ஏன் விசாரணை நடத்தக் கூடாது?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.