சென்னை: தமிழக பாஜ மீனவர் அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மீனவர் அணி தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொது செயலாளர் கருநாகராஜன், மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், வழக்கறிஞர் அணி தலைவர் பால்கனகராஜ் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கழுத்தில் மீன் வலையை தொங்க விட்டப்படி கலந்து கொண்டனர்.
அப்போது,அண்ணாமலை பேசுகையில், கடந்த 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு மற்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக 464 மீனவர்கள் உயிரிழந்தனர். ஆனால் பாஜ ஆட்சிக்கு வந்து 7 வருடத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மத்திய அரசின் மானியம் நேரடியாக தமிழகத்தில் மட்டும் மீனவர்களுக்கு ரூ.1500 கோடி வந்துள்ளது’ என்றார்.