சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணி கடந்த 2018 மே 8ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்டுமான பணியை கவனிக்க கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் நியமிக்கப்பட்டார். அவரது கண்காணிப்பின் பேரில் இப்பணிகள் நடந்தது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணிக்கு, ஒப்பந்த நிறுவனத்துக்கு போதுமான அனுபவம் இல்லாத காரணத்தால் 2 ஆண்டுகளாக நடந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபரில் தான் பணிகள் முடிக்கப்பட்டன. இந்த நினைவிட கட்டுமான பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகள் மேலானதால், முன்னாள் முதல்வரின் கோபத்துக்கு ஆளாகி, ஜெயலலிதா நினைவிட பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சென்னை மண்டல கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் கண்காணிப்பு பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் தற்போது பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டுமான பிரிவில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் பலர் கட்டுமானத்துறைக்கு பணியிட மாற்றம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையேற்று கட்டுமான பிரிவில் அனுபவம் வாய்ந்த சென்னை மண்டல மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராக ஆயிரத்தரசு ராஜசேரை நியமனம் செய்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை பொறியாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக பொறியாளர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.