சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வரை தலைவராக கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கடந்த 20ம் தேதி திருத்தி அமைக்கப்பட்டது. இக்குழுவில், நிதித்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்களையும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவின் முதல் கூட்டம் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது.