×

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 3 டிரோன்: நள்ளிரவில் பரபரப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் 3 வெவ்வேறு பகுதிகளில் நள்ளிரவில் டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தின் மீது கடந்த மாதம் தீவிரவாதிகள் டிரோன்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும்  டிரோன்கள் அடிக்கடி பறந்து , மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 3 வெவ்வேறு இடங்களில் டிரோன்கள் பறந்துள்ளன.

பாகிஸ்தானின் சர்வதேச எல்லை பகுதியில் வானில் மர்மமான ஒளிகள் தென்பட்டன. பாதுகாப்பு படைகள் அவற்றை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பிறகு, அவை மாயமாக மறைந்தன. அவை எங்கிருந்து வந்தன? உளவு பார்க்க வந்ததா? என பாதுகாப்பு படைகள் விசாரித்து வருகின்றன.

தீவிரவாதிகள் குண்டு வீச்சு 3 போலீசார் படுகாயம்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கந்த்போரா பகுதியில் சிஆர்பிஎப் - ஜம்மு போலீசார் அடங்கிய கூட்டுக்குழு நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது. அப்போது, அவ்வழியாக அப்பாவிகள் போல் வந்த தீவிரவாதிகள், இந்த கூட்டுப்படை மீது திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், 2 சிஆர்பிஎப் வீரர்களும், ஒரு போலீசாரும் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தீிவிரவாதிகளை வேட்டையாட, அப்பகுதியை பாதுகாப்பு படைகள் சுற்றி வளைத்துள்ளன.


Tags : Jammu ,Kashmir ,Pakistan , Jammu and Kashmir, Border, Pakistan, Drone
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை