டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி திட்டமிட்ட சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால், வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்பவும் இங்கு சிக்கிய வெளிநாட்டினர் சொந்த நாட்டுக்கு திரும்பவும் வசதியாக மே மாதம் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி சிறப்பு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், ஏற்கனவே, திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை ஜுலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், சர்வதேச விமான சேவைக்கான தடை வரும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.