மதுரை: நடப்பாண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக தற்காலிகமாக சிவகங்கை மருத்துவ கல்லூரி அல்லது தேனி மருத்துவக்கல்லூரியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரையில் இன்னும் தொடப்படாமல் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடப்பாண்டு மருத்துவ சேர்க்கை தொடர்பாக மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
பிற மாநிலங்களில் உள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய மனுதாரர் அங்கு வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருந்தார். எனவே மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை உருவாக்கி அங்கு வெளிப்புற நோயாளிகள் துறையை உருவாக்க வேண்டும் என்றும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடக்கோரியும் அவர் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு 50 மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து ஒன்றிய அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு தேனி மற்றும் சிவகங்கை மருத்துவ கல்லூரிகளை தற்காலிக மாணவர் சேர்க்கைக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது. இந்த இரண்டில் பொருத்தமான கல்லூரியை எய்ம்ஸ் மருத்துவ குழு தேர்வு செய்யலாம் என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.