சென்னை: சென்னையில் வாகன நெரிசல்கள், தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளின் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. காற்றின் நுண்துகள்கள் சிலிக்கான், மாங்கனீசு, நிக்கல் அளவும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. சென்னையில் காற்றின் தர அளவீடு பி.எம் 2.5 அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1 முதல் 3.8 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் காற்று மாசுகளை கட்டுப்படுத்த புதிய செயல் திட்டங்களை வகுத்துள்ள சென்னை மாநகராட்சி, அதனை தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் எல்டிஇ திரையுடன் கூடிய காற்றின் தரம் அளவீட்டு கருவி சென்னையில் உள்ள ஐம்பது இடங்களில் வைக்கப்படவுள்ளன.
மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகள் சிக்னல்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் இந்த அளவீட்டு கருவிகள் வைக்கப்பட்டு புறகாற்றில் உள்ள ஆக்சிஜன் கார்பன்டை ஆக்சைடு நுண்துகள்கள் போன்றவை கணக்கிடப்படுவதோடு அங்குள்ள எல்இடி திரையிலும் வெளியாகும். காற்றின் தரம் மற்றும் மாசு அளவுகளை பொதுமக்களும் நிகழ்நேரத்தில் தெரிந்துகொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நகரின் எந்தெந்த இடங்களில் காற்று மாசு அதிகமாக உள்ளது என்பது கண்டறியப்பட்டு அங்கு மாசு குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் வழிவகை செய்யப்படும். இதற்கு டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தரஅளவீட்டு கருவிகள் பொருத்தப்பட்டு பரிசோதனை தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.