சென்னை: ஸ்கூபா டைபிங் உடையில் கடலுக்குள் மூழ்கி மாசை ஏற்படுத்தும் பொருட்களை நீக்கி வருகிறார் சென்னை சிறுமி தாரகை ஆராதனா. சென்னை காட்டுப்பாக்கத்தில் வசிக்கும் ஸ்கூபா டைபிங் பயிற்சியாளர் அரவிந்தின் ஏழரை வயது மகள் தான் சிறுமி தாரகை ஆராதனா. பிறந்து 3-வது நாளிலேயே தண்ணீர் தொட்டியில் பழக்கப்படுத்தியதால் என்னவோ இப்போது கடலுக்குள் குட்டி கடல் கன்னியாகவே வளம் வருகிறார் இவர்.
2-ம் வகுப்பு மாணவியான ஆராதனா ஸ்கூபா டைபிங் உடைக்கு மாறிவிட்டால் அவரது கால்கள் தரையில் நிற்காது. கடலுக்குள் குதித்து பயணிக்கவே துடிக்கிறது. செயற்கை சுவாச கருவியுடன் கடலுக்குள் ஏழு மீட்டர் ஆழத்துக்கு செல்லும் சிறுமியின் தேடல் மாசை ஏற்படுத்தும் பொருட்கள் மீது தான். கடலுக்கு அடியில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அப்புறப்படுத்துவதன் மூலம் கடலையும் சுற்றுப்புறத்தையும் மாசடையாமல் பாதுகாக்க முடியும் என்கிறார் இந்த சின்னஞ்சிறு சிறுமி.
கடலை சுத்தப்படுத்துவது அல்லாமல் கடலுக்குள் அருந்த வலையில் சிக்கி உயிருக்கு போராடும் கடல் வாழ் உயிரினங்களையும் தனது தந்தையுடன் சேர்ந்து மீட்டெடுக்கவும் தவறுவது இல்லை இந்த சின்னஞ்சிறு சிறுமி. கடல் மாசடைவதால் அழிந்து வரும் கடல் பசுக்களை அழிவில் இருந்து காப்பது தான் தனது லட்சியம் என சூளுரைக்கவும் தவறவில்லை இந்த பிஞ்சு உள்ளம்..