வருசநாடு : வருசநாடு அருகே மலைச்சாலைகளில் தார்ச்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே, உடனே சாலை சீரமைப்பு பணிகளை துவங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு-வாலிப்பாறை கிராமம் வரை தார்ச்சாலை பணிகள் கடந்தாண்டு நடந்தது. இதனால் இப்பகுதியில் விளையும் விவசாயப் ெபாருட்களை நகர்பகுதிக்கு கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுவதாக இப்பகுதி மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.இதுசம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். கடந்த ஆட்சியில் இருந்தவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள மலைச்சாலைகளில் கடந்தாண்டு சாலை சீரமைப்பு பணிகள் நடந்தது. அப்போது வனத்துறையினர், இப்பகுதியில் பல இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதாக கூறி சாலைப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதனால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சாலைப்பணிகள் நடக்காமல், சாலை முழுவதும் பள்ளம் மேடாக பல்லாங்குழ ரோடாக காட்சியளிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக இப்பகுதியில் அனைத்து பகுதிகளிலும் தார்ச்சாலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்றனர்.