பாணாவரம் : பாணாவரம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இப்பள்ளியை, சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே கர்ணாவூர் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளியில் பழைய, புதிய பள்ளி கட்டிடம் சத்துணவு பழைய மற்றும் புதிய கட்டிடங்கள் உள்ளது. புதிய பள்ளிக் கட்டிட வராண்டாவில், குடிமகன்கள் குடித்து கொட்டம் அடித்துவிட்டு காலி பாட்டில்கள், தின்பண்ட கழிவுகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை போட்டு சென்றுள்ளனர். மேலும், உடைந்துள்ள குடிநீர் தொட்டியிலும் காலி பாட்டில்கள் உள்ளிட்டவைகளை போட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் பல்வேறு பகுதிகளில், மதுபாட்டில்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது, பள்ளி சேர்க்கை உள்ளிட்ட பணிகளுக்காக செயல்படுகிறதா? என்கிற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் இங்குள்ள, பயன்படுத்தப்படாத பழைய பள்ளிக் கட்டிடத்தின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து கிடக்கிறது. இக்கட்டிடம் நாய்கள் உறங்கும் கூடமாகவும் மாறிப் போயுள்ளது. மேலும், பள்ளி வளாகம் மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. பள்ளியின் பிரதான நுழைவுவாயில் கேட் திறந்து கிடப்பதால் சமூக விரோதிகளின் செயல்பாடுகள் இங்கு அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கொரோனா காலத்தில் மாதாந்திர உலர் உணவுப் பொருட்கள், சீருடை வழங்கல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், பள்ளி வளாகத்தில் உள்ள மதுபாட்டில்களை அகற்றப்படாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒட்டுமொத்தமாய் சீரழிந்து கிடக்கும் கல்விக் கூடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.