×

ரிப்பன் மாளிகையை தொடர்ந்து தலைமை செயலகத்தில் ‘தமிழ் வாழ்க’ பலகை: அனைத்து தரப்பினரும் பாராட்டு

சென்னை: ரிப்பன் மாளிகையை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் மேல் பல ஆண்டுகளாக இருந்த ‘தமிழ் வாழ்க’ என்ற பெயர் பலகை கடந்த அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்த உடனே சென்னை மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் ‘தமிழ் வாழ்க, தமிழ் வளர்க’ என இரண்டு பெயர் பலகைகள் மீண்டும் நிறுவப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கை தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகிறார். அன்றைய தினம் மாலை சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேரவை வளாகத்தில் மறைந்த முதல்வர் கலைஞரின் உருவப்படத்தை திறந்துவைக்க உள்ளார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமை செயலகத்தின் 2 மற்றும் 3ம் எண் நுழைவாயில் கட்டிடத்தின் மேல்புறத்தில் ‘தமிழ் வாழ்க’ என்ற வாசகம் அடங்கிய பெயர் பலகைகளை புதிதாக தமிழக அரசு நிறுவி உள்ளது. நேற்று முன்தினம் மாலை வண்ண விளக்குகள் மிளிர இந்த பெயர் பலகைகள் அமைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரவேற்றுள்ளனர்.

Tags : Tamil Vazhaka ,General ,Secretariat ,Ribbon House , ‘Tamil Vazhaka’ board at the General Secretariat following the Ribbon House: Praise from all parties
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...