×

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்யாததை 2 மாதங்களில் செய்ய வேண்டும் என்பதா? : ஈபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

சென்னை : அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் செய்யாததை 2 மாதத்தில் செய்ய வேண்டும் என கூறுவது எந்த வகையில் நியாயம் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைகள் வளாகத்தில், அவசர  கவனிப்பு மற்றும் மீட்பு மைய திறப்பு விழா இன்று நடந்தது. நகர்ப்புற  வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர், ஆதரவற்றோர் மன நோயாளிகளுக்கான  மீட்பு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 ஐபிஎம்  உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர். மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.இதையடு்த்து, கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், ‘சென்னையில் 30 லட்சத்து 75 ஆயிரம் 292 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 13 லட்சம் தடுப்பூசி கூடுதலாக மத்திய அரசு வழங்கி இருப்பதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தேவையான அளவு தொடங்கப்பட்டுள்ளது.

செப்டம்பருக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பருக்குள் நடைபெறும்’ என்றார்.இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘அதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பதை ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவிக்க வேண்டும். 3 மாதம்கூட முழுமையடையாத நிலையில், அரசு செய்துள்ள நடவடிக்கைகளை மக்களே அறிவர். 10 ஆண்டுகள் ஆட்சியில் செய்யாததை 2 மாதத்தில் செய்ய வேண்டும் என கூறுவது எந்த வகையில் சரியாக இருக்கும்.

சென்னையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்படுவதால்தான் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருகிறது. அடுத்த வாரம் கிருஷ்ணகிரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக கூடுதலாக 1000 செவிலியர்களை நியமனம் செய்ய உள்ளனர்.  அம்மா கிளினிக் மூலம் எந்த அடித்தட்டு மக்கள் பயன்பெற்றார்கள்?   பெயரளவுக்கு மட்டுமே அம்மா கிளினிக் செயல்படுகிறது’ என்றார்.



Tags : EPS ,OPS ,Subramanian , மா.சுப்பிரமணியன்
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்