×

புலிகள் பாதுகாப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து... புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை உருவாக்க வலியுறுத்தல்!!

டெல்லி : சர்வதேச புலிகள் தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி கானுயிர் ஆர்வலர்களுக்கு, குறிப்பாக புலிகள் பாதுகாப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,

சர்வதேச புலிகள் தினத்தன்று, கானுயிர் ஆர்வலர்களுக்கு, குறிப்பாக புலிகள் பாதுகாப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.  உலகளவில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட புலிகள் வசிக்கும் இடமாக இருக்கும் நமது நாட்டில், நமது புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை உறுதி செய்வதற்கும், புலிகளுக்கு நட்பான சூழல் அமைப்புகளை வளர்ப்பதற்குமான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் 18 மாநிலங்களில் 51 புலி சரணாலயங்கள் உள்ளன. 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கடைசி புலிகள் தொகை கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. புலிப்பாதுகாப்பு குறித்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தின் இலக்கான, புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை  நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா அடைந்தது.

 இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு உத்தியில் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவது மிக முக்கியமானதாக உள்ளது. நமது புவிக்கோளை பகிர்ந்து கொள்ளும் அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடன் இணக்கமாக வாழும் பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகள் நமக்கு ஊக்கமளிக்கிறது

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,LTTE , நரேந்திர மோடி
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...